உள்ளூர் செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் மாமியார் வீட்டில் நகை- பணம் திருடிய மருமகன் கைது

Published On 2023-02-09 12:58 IST   |   Update On 2023-02-09 12:58:00 IST
  • லட்சுமியின் மருமகனான கந்தவேல் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
  • சென்னை நுங்கம்பாக்கம் மேதாநகரில் தனது மனைவியுடன் வசித்து வந்த அவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் சாவடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி லட்சுமி. சம்பவத்தன்று இவர்களது வீட்டுக்குள் யாரோ மர்மநபர் பின்பக்க கதவை உடைத்து புகுந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்றார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீஸ் நிலையத்தில் லட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.

அதனை வைத்து பழைய குற்றவாளிகள் யாரும் லட்சுமி வீட்டில் நடந்த கொள்ளையில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? என்று போலீசார் துப்பு துலக்கி வந்தனர். லட்சுமி வீட்டில் இருந்தவர்களின் கைரேகைகளையும் சேகரித்து ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.

அப்போது லட்சுமியின் மருமகனான கந்தவேல்(வயது38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. சென்னை நுங்கம்பாக்கம் மேதாநகரில் தனது மனைவியுடன் வசித்து வந்த அவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மனைவியின் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால் அவரிடம் சந்தேகத்தின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் தனக்கும், திருட்டுக்கும் தொடர்பில்லை என கூறியிருக்கிறார். இருந்தபோதிலும் போலீசாருக்கு அவர் மீது ஏற்பட்ட சந்தேகம் விலகவில்லை.

இதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாமியார் லட்சுமி வீட்டில் பணம் மற்றும் நகையை திருடியது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News