பஸ்சில் இருந்து குதித்து தற்கொலை செய்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக போராட்டம்
- விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
- 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக நாகலட்சுமி 100 நாள் வேலை திட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
பணி தொடர்பாக நாகலட்சுமிக்கும், பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடர்பாக நாகலட்சுமி கள்ளிக்குடி போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசாரும் நடவடிக்கை எடுக்காமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நாகலட்சுமி அரசு பஸ்சில் செல்லும் போது கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்பு நாகலட்சுமி எழுதிய கடிதத்தில், தனது தற்கொலைக்கு காரணம் மையிட்டான்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் முருகன், உறுப்பினர் வீரக்குமார், கிளார்க் முத்து என குறிப்பிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில் 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையறிந்த அவர்கள் தலைமறைவானார்கள். இந்த நிலையில் பிரேத பரிசோதனைக்காக நாகலட்சுமியின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்த பின்பு உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து விட்டனர். தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை கைது செய்ய வேண்டும், நாகலட்சுமியின் கணவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 5 பெண் குழந்தைகளையும் அரசு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதற்கு ஆதரவாக அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
கடந்த 2 நாட்களாக இந்த போராட்டம் நடந்து வருகிறது. 3-வது நாளாக இன்றும் நாகலட்சுமியின் உடலை வாங்காமல் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.