தருமபுரி அருகே பிளஸ்-2 மாணவியை வழி மறித்து பலாத்காரம்: போலீசார் விசாரணை
- பிளஸ்-2 மாணவியை யாரோ வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
- சம்பவம் குறித்து இண்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், மிட்டாசின்னஅள்ளி அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி.
இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
தினமும் பள்ளிக்கு அந்த மாணவி சைக்கிளில் சென்று வருவது வழக்கம். சம்பவத்தன்று பள்ளியை விட்டு புறப்பட்ட மாணவி குறித்த நேரத்துக்கு வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் மாணவியின் உறவினர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் மாணவி வழக்கமாக வீட்டுக்கு வரும் பாதையில் சென்றுள்ளார்.
அப்போது ஒரு புதர் அருகே மாணவியின் சைக்கிள் மட்டும் நின்றுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அப்பகுதியில் தேடி பார்த்த போது சற்று தொலைவில் மாணவி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை அங்கிருந்து தூக்கி சென்று பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த மாணவியை யாரோ வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்திருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக இண்டூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. பின்னர் அந்த புகார் அனைத்து மகளிர் போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை வழிமறித்து பலாத்காரம் செய்தது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கல்லூரி மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.