வேறொருவரின் இடத்தை காண்பித்து ரூ.17 லட்சம் மோசடி செய்த கணவன்-மனைவி: போலீசார் வழக்குப்பதிவு
- மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர்:
நெல்லை பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 53). விருதுநகர் மாவட்டம் மாத்தி நாயக்கன்பட்டி பவித்ரா நகரை சேர்ந்த அற்புதராஜ் (74) என்பவர் தனக்கு சொந்தமாக நெல்லை டவுனில் இடம் உள்ளது என மகாலிங்கத்திடம் கூறி உள்ளார்.
இதனை நம்பிய அவர் அந்த நிலத்தை கிரையம் பேசினார். அற்புதராஜ் அதற்கு ஒப்புக்கொண்டதையடுத்து முன்பணமாக அவரது வீட்டில் வைத்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் கொடுத்துள்ளார்.
அதன் பின் ஒரு செண்டுக்கு ரூ.8 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு ரூ.10 லட்சத்து 50 ஆயிரத்தை மகாலிங்கம் காசோலை மூலம் அற்புதராஜூக்கு கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர் இடத்தை கிரையம் செய்து தர முன்வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த மகாலிங்கம், நெல்லை சார்பதிவாளர் அலுவலகம் சென்று விசாரித்தபோது, குறிப்பிட்ட இடம் வேறொருவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், பணத்தை திருப்பி தருமாறு அற்புத ராஜிடம் கேட்டபோது, அப்போது அவர் ரவுடியை வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியதோடு பணத்தை திருப்பித்தர மறுத்து விட்டார். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இந்த மோசடி குறித்து மகாலிங்கம் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.