உள்ளூர் செய்திகள்

ஈரோட்டில் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-07-01 04:04 GMT   |   Update On 2022-07-01 04:04 GMT
  • கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை.
  • இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

ஈரோடு:

ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மகனும், முத்துலட்சுமி (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி சிறுவயதாக இருக்கும் போதே அவரது தாய் இறந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமியின் தந்தையும் இறந்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமியின் அத்தை சாந்தி முத்துலட்சுமியையும், அவரது அண்ணன் சூர்யாவையும் வளர்த்து வந்தார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். முத்துலட்சுமிக்கு அவரது அத்தை சாந்தி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சாந்தியும், முத்துலட்சுமியின் அண்ணனும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை சாந்தி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சாந்தி கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News