ஆத்தூர் அருகே விபத்தான காரில் மூட்டை மூட்டையாக கிடந்த போதை பொருட்கள்- தலைமறைவான டிரைவருக்கு வலைவீச்சு
- கார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்தானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆத்தூர்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. அந்த கார் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்தானது.
இதுப்பற்றி தெரியவந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தான காரை சோதனை செய்தனர். அப்போது காரில் ஏராளமான மூட்டைகள் கிடந்தது. இதையடுத்து போலீசார் அதை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் ஏராளமான போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், காரில் போதை பொருள் கடத்தி வந்த போது விபத்தில் சிக்கியதால் டிரைவர் தப்பி ஓடியது தெரியவந்தது. காரில் மொத்தம் 42 மூட்டைகளில் போதை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து காரின் பதிவு எண்ணை வைத்து உரிமையாளர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.