உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீவிபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் சேதம்

Published On 2024-03-02 08:19 GMT   |   Update On 2024-03-02 08:19 GMT
  • நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
  • அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ் நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் வள்ளுவர் நகரை சேர்ந்த கண்ணன் இருவரும் தோனுகாலில் உள்ள ஒரு எந்திர தீப்பெட்டி ஆலை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

அந்த ஆலையில் பணியாளர்கள் நேற்று வழக்கம் போல பணிகளை முடித்துவிட்டு வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவில் ஆலையில் உள்ள எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து பற்றி எரிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக வெளியேறி தீயணைப்பு படை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சுந்தர்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் தீ தொடர்ந்து எரிந்ததால் தீயை அணைப்பதற்கு டிராக்டர் மூலமும் தண்ணீர் கொண்டு வந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.

நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. ஆனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள எந்திரங்கள் முற்றிலுமாக சேதமடைந்தன.

சம்பவ இடத்தை கோவில்பட்டி தாசில்தார் சரவணபெருமாள், வருவாய் ஆய்வாளர் ராம மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News