உள்ளூர் செய்திகள்

ஊரப்பாக்கத்தில் ஆடிட்டர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2023-09-14 06:19 GMT   |   Update On 2023-09-14 06:19 GMT
  • கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

வண்டலூர்:

ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் கிராமம், கவின் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அரசு அலுவலகத்தில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி புவனேஸ்வரியுடன் வீட்டின் கீழ்தளத்தில் வசித்து வருகிறார். மேல் தளத்தில் அவர்களது ஒரு மகன் குடும்பத்துடன் உள்ளார்.

இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி சீனிவாசன் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்தஊரான தஞ்சாவூருக்கு சென்றார். பின்னர் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள், பூஜை பொருட்கள், இரண்டு லேப்டாப் மற்றும் ஒரு எல்.இ.டி. டிவி ஆகியவற்றை மர்ம நபர்கள் சுருட்டி சென்று இருந்தனர்.

வீட்டின் மேல் தளத்தில் உள்ள சீனிவாசனின் மகன் தங்கி இருந்த அறைக்கு கொள்ளையர்கள் செல்லாததால் அங்கிருந்த 30 பவுன் நகை தப்பியது.

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News