உள்ளூர் செய்திகள்

நடத்தையில் சந்தேகப்பட்டு 3-வது மனைவியை தீ வைத்து எரித்த டிரைவர்

Published On 2022-12-21 10:07 GMT   |   Update On 2022-12-21 10:07 GMT
  • கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர்.
  • 3-வதாக கிருஷ்ணமூர்த்தி கவுரியை திருமணம் செய்தார். கவுரிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நேரு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 39). பெயிண்டர். இவரது மனைவி கவுரி (32). இவர்களுக்கு 1 வயதில் ஒரு மகன் உள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி, கவுரியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே 2 திருமணம் செய்து மனைவிகளை விவாகரத்து செய்தவர். 3-வதாக அவர் கவுரியை திருமணம் செய்தார். கவுரிக்கும் இது 2-வது திருமணம் ஆகும்.

சிறிது காலம் மகிழ்ச்சியாக சென்ற இவர்களது வாழ்வில் கிருஷ்ணமூர்த்தியின் சந்தேக புத்தியால் பிரச்சினை ஏற்பட தொடங்கியது. கவுரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி தகராறு செய்தார்.

சம்பவத்தன்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் கவுரி தூங்க சென்றார். ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி வீட்டில் இருந்த பெயிண்டிங் கலக்க பயன்படுத்தப்படும் எண்ணையை எடுத்து தூங்கிக் கொண்டு இருந்த கவுரியின் மீது ஊற்றினார். பின்னர் தீப்பற்ற வைத்தார். பின்னர் அங்கு இருந்து தப்பிச் சென்றார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயில் இருந்து கவுரியை மீட்டனர். பின்னர் அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்ற கிருஷ்ண மூர்த்தியை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News