உள்ளூர் செய்திகள்

திருமணம் செய்து குடித்தனம்- சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய வாலிபர்

Published On 2022-11-19 11:35 IST   |   Update On 2022-11-19 11:35:00 IST
  • வெற்றிவேல் முருகனுக்கு கஞ்சா மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.
  • சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

மதுரை:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு கோமதி என்ற மனைவியும், வெற்றிவேல் முருகன் (வயது28) என்ற மகனும் உள்ளனர்.

குருநாதனும், அவரது மகனும் மதுரையில் பழ வியாபாரம் செய்து வருகிறார்கள். இதனால் அவர்கள் இருவரும் மதுரை அண்ணாநகரில் வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

இந்நிலையில் வெற்றிவேல் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பாலை பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க சிறுமியை திருமணம் செய்து, அதே பகுதியில் தனி குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

வெற்றிவேல் முருகனுக்கு கஞ்சா மற்றும் மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவர் போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

நேற்று காலையும் சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரி தாக்கி உள்ளார். பின்பு சிறுமியை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.

கணவரின் சித்ரவதை தாங்காத சிறுமி, அதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் பேசி தகவல் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர்.

அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் அடித்ததற்கான காயங்கள் மற்றும் சிகரெட்டால் சூடு வைத்த காயங்கள் இருந்தன. அதுகுறித்து விசாரித்தபோது வெற்றிவேல் முருகன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தியதாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை போலீசார் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமியை திருமணம் செய்து அடித்து உதைத்து துன்புறுத்தி பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கிய சம்பவம் குறித்து வெற்றிவேல் முருகன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

சிறுமியை அடித்து துன்புறுத்துதல், அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெற்றிவேல் முருகனின் தாய் கோமதி, நரிக்குடி பகுதியில் தி.மு.க. நிர்வாகியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News