உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் மோதலால் பழவேற்காட்டில் மீன் விலை கடும் உயர்வு

Published On 2023-01-08 12:35 IST   |   Update On 2023-01-08 12:35:00 IST
  • கடந்த சில நாட்களாக மீனவர்களிடையே மீன் பிடித் தொழில் செய்வதில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
  • மீன்பிடிப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்துவருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

பழவேற்காட்டை சுற்றி உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பழவேற்காடு ஏரி மற்றும் கடல் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக மீனவர்களிடையே மீன் பிடித் தொழில் செய்வதில் மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் பழவேற்காட்டில் உள்ள மீன் ஏலக் கூடத்துக்கு விற்பனைக்கு வரும் மீன்கள் வரத்து பெருமளவு குறைந்து விட்டது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று பழவேற்காடு மீன்சந்தையில் வழக்கமான மீன்விற்பனை இல்லை. குறைந்த அளவே மீன்கள் விற்பனைக்கு வந்ததால் மீன்சந்தை களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.

பெரிய வகை மீன்கள் அதிக அளவில் வராததால் விற்பனைக்கு இருந்த சிறிய வகை மீன்களின் விலையும் கடுமையாக உயர்ந்து இருந்தது.

ரூ.200-க்கு விற்கப்பட்ட இறால் இன்று காலை ரூ.500 வரை விற்கப்பட்டது. இதேபோல் ரூ.300-க்கு விற்ற நண்டு ரூ. 800 வரை விற்பனை ஆனது.

ரூ.500-க்கு விற்ற வஞ்சிரம் ரூ.1000 வரையிலும், ரூ.100-க்கு விற்ற மத்தி ரூ.300-க்கும், கானங்கத்தை ரூ. 500-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து மீனவர்கள் கூறும்போது, பழவேற்காடு பகுதியில் மீன்பிடிப்பதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்துவருவதால் பெரும்பாலான மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் விற்பனைக்கு மீன்கள் வரத்து குறைந்து விலை அதிகரித்து உள்ளது என்றனர்.

Tags:    

Similar News