உள்ளூர் செய்திகள்

வந்தவாசி அருகே கிணற்றில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி எலக்ட்ரீசியன் பலி

Published On 2022-12-23 10:27 IST   |   Update On 2022-12-23 10:27:00 IST
  • சீனிவாசன் நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தவாசி:

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34 ). எலக்ட்ரீசியன். இவரது மனைவி சாந்தி இவர்களுக்கு கவுசிகா (12) என்ற மகளும், தர்ஷன் (9) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் வந்தவாசி அடுத்த கீழ்குவளைவேடு கிராமத்தில் தனியார் பாலிடெக்னிக்கில் தேர்வு எழுதுவதற்காக நண்பர்களுடன் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வந்தார். அப்போது இவர்களது நண்பர்களான முத்துவேல்குமரன், கலைவாணன், கவியரசன், வேலாயுதம் ஆகியோருடன் கீழ்குவளைவேடு கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து சீனிவாசன் தங்கி வந்தார்.

இந்த நிலையில் சீனிவாசன் நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். சீனிவாசனுக்கு நீச்சல் தெரியாததால் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். அவரை காப்பாற்ற நண்பர்கள் முயன்றனர். அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் வந்தவாசி தீயணைப்பு துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி சீனிவாசனை தீயணைப்பு துறையினர் பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News