உள்ளூர் செய்திகள்

மனைவியின் நகைகளை அடகு வைத்து கள்ளக்காதலிக்கு வீடு கட்டிக்கொடுத்த பேராசிரியர்

Published On 2024-03-15 10:05 GMT   |   Update On 2024-03-15 10:05 GMT
  • திருமணத்தின் போது 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.
  • மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார்.

மதுரை:

மதுரை கோ.புதூர் பாரதியார் மெயின்ரோடு திரவுபதி அம்மன் கோவில் 2-வது தெருவை சேர்ந்தவர் பால் பாண்டியன் மகள் அனுசுயா (வயது 28). இவர் அண்ணாநகர் போலீஸ் துணை கமிஷனரிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை பார்த்து வருகிறேன். அப்போது என்னுடன் வேலை பார்த்த பேராசிரியரான விஜய் என்பவரை காதலித்து 2021-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எங்கள் வீட்டின் சார்பில் 80 பவுன் தங்க நகைகளும், ரூ.5 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களையும் எனது வீட்டார் வரதட்சணையாக கொடுத்தனர்.

இந்தநிலையில் எங்களுக்கு ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எனது கணவர் விஜய் தன்னுடன் வேலை பார்க்கும் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் கொண்டுள்ளார். அவருடன் சேர்ந்து கொண்டு எனது பெற்றோர் அளித்த நகைகளை ரூ.12 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார்.

மேலும் 20 பவுன் நகைகளை எனது தாயாரிடம் வாங்கி வந்து அவற்றையும் அடகு வைத்துள்ளார். அந்த பணத்தில் அவரது கள்ளக்காதலியின் பெயரில் வீடு வாங்கியுள்ளார். இதை கண்டித்த என்னை மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரும், அவரது குடும்பத்தினரும் என்னை சித்ரவதை செய்து வருகின்றனர் என அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.

மனுவை பரிசீலித்த போலீஸ் உதவி கமிஷனர் உத்தரவின் பேரில், அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை சித்ரவதை செய்ததாக அனுசுயாவின் கணவர் விஜய், மாமியார் ஜெயலட்சுமி, கணவரின் சகோதரி சுகப்பிரியா, சுகப்பிரியாவின் கணவர் சிவயோகம் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News