தூத்துக்குடியில் 468 மது பாட்டில்களை பதுக்கிய தி.மு.க. நிர்வாகி கைது
- தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
- மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தூத்துக்குடி:
நாளை மறுநாள் (19-ந்தேதி) பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்யும் நோக்கத்தோடு சிலர் அதிக அளவில் மது பாட்டில்களை பதுக்கி வருவதாக தூத்துக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேசமணி நகரை சேர்ந்த ஸ்பிக் நகர் பகுதி தி.மு.க. நிர்வாகியாக உள்ள பொன் கற்பகராஜ் (வயது33) என்பவர் அனுமதியின்றி விற்பனை செய்ய மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத்தொடர்ந்து நேசமணி நகர் சந்திப்பில் வைத்து பொன் கற்பக ராஜை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அவர் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்ய வைத்திருந்தது உறுதியானது. அவரிடம் இருந்து 432 மது பாட்டில்கள், 36 பீர் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து பொன் கற்பக ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.