உள்ளூர் செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

Published On 2024-03-30 10:35 GMT   |   Update On 2024-03-30 10:35 GMT
  • கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர்.
  • காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

பழனி:

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு காரில் வந்து மர்ம நபர் திருடிச் செல்லும் சம்பவம் அதிகரித்து வந்தது. அவர் வந்த காரின் எண்ணை வைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பதிவெண் கொண்ட கார் திருப்பூரிலும் நடமாடி வந்தது. மேலும் அந்த காரில் இருந்த மர்மநபர் திருப்பூர் மாவட்டத்திலும் பல்வேறு வீடுகளில் கைவரிசை காட்டி வந்துள்ளார். இவரை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பிரதீப் உத்தரவின் பேரில் பழனி டி.எஸ்.பி. தனஞ்செயன் மேற்பார்வையில் பழனி தாலுகா இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் கார்த்திகேயன், முபாரக் கொண்ட தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது சம்மந்தப்பட்ட பதிவெண் கொண்ட கார் பழனி அருகே வந்தபோது அதனை சுற்றி வளைத்தனர். காரில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரித்ததில் அவர் சிவகங்கை மாவட்டம் தெற்கு தமராக்கி பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் அதிபதிராஜா (வயது 23) என தெரியவந்தது.

இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து விதவிதமான கார் பதிவெண்களை கொண்டு பகல் நேரங்களில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து அவரிடமிருந்து 2 கார்கள், போலி பதிவெண்கள், கையுறை, முகமுடி, பூட்டை உடைக்க பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பறினர்.

மேலும் அதிபதிராஜாவை பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காட்டை சேர்ந்த பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய சுள்ளான் அகிலன், நித்தீஸ், கேடி கண்ணன், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த அராத் என்ற பாசில் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News