உள்ளூர் செய்திகள்

அடுத்தடுத்து 3 பேர் கவர்னர்களாக நியமனம்: பிரதமர் மோடி தமிழகத்தின் மீது கொண்ட பற்றே காரணம்- சி.பி.ராதாகிருஷ்ணன்

Published On 2023-02-13 10:38 GMT   |   Update On 2023-02-13 10:38 GMT
  • யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது.
  • கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும்.

கோவை:

தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கவர்னராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட சமயம் திருப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் இருந்தார். கவர்னராக நியமிக்கப்பட்டதும் தனது தாயாரிடம் ஆசி பெற்றார்.

தகவல் அறிந்து பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டில் திரண்டு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று காலை சென்னை செல்வதற்காக திருப்பூரில் இருந்து கார் மூலமாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஆளுநர் பதவி எனக்கு கிடைத்துள்ளதை மகத்தான ஒரு மரியாதையாகவும், தமிழினத்திற்கு கிடைத்த பெருமையாகவும் பார்க்கிறேன்.

நாம் என்ன தான் தொடர்ந்து அரசியலில் உழைத்து கொண்டிருந்தாலும், நாம் நினைக்கிற திசையில் நமது அரசியல் பயணம் இருப்பது இல்லை.

யாருக்கு எந்த பொறுப்பு எப்போது கிடைக்கும் என்பதை நாம் அறியமுடியாது. எனவே கவர்னர் பொறுப்போ அல்லது எந்த பொறுப்பாக இருந்தாலும் கிடைத்த பொறுப்பின் மூலம் நாம் சரியாக சமுதாயத்திற்காக பணியாற்ற வேண்டும். எனது அரசியல் பயணமானது அந்த வகையில் தான் இருந்து வந்திருக்கிறது.

பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ஆகியோர் தமிழ் மீதும், தமிழகத்தின் மீதும், தமிழ் கலாசாரம், இலக்கியம், பண்பாட்டின் மீது மிகுந்த பற்று வைத்துள்ளனர். அதன் வெளிப்பாடு தான் தமிழகத்தை சேர்ந்த 3 தமிழர்கள் வெவ்வேறு மாநில கவர்னர்களாக பணியாற்றும் அரிய வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கும், ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பொதுவாக குற்றச்சாட்டு என்பது அரசியலில் இருந்து கொண்டு தான் இருக்கும். அது நியாயமானதும் கூட தான். அந்த குற்றச்சாட்டுகளை எல்லாம் நாம் மனவலிமையோடு மேற்கொண்டால் எல்லாம் காணாமல் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். 

Tags:    

Similar News