ஆம்பூர் அருகே துப்புரவு பணியாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள நாயக்கனேரி அடுத்த மேலூரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் நாயக்கனேரி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குப்புசாமி தனது 3 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் குப்புசாமி நேற்று மாலை தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.
இதனை கேட்டு பதறிப்போன அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது குப்புசாமி நாட்டு துப்பாக்கியால் தனக்கு தானே கழுத்தில் சுட்டுக்கொண்டு, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். துப்பாக்கி எப்படி அவருக்கு கிடைத்தது என விசாரணை நடத்தினர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.