சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவவீரர் போக்சோவில் கைது
- ராணுவவீரர் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
- சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ராணுவ வீரரை கைது செய்தனர்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (21). ராணுவவீரர். இவர் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவர் விடுமுறையில் ஊருக்கு வந்த போது ஒரு சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் பவானி அனைத்து மகளிர் போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் புகார் செய்தனர்.
இதையடுத்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ராணுவவீரர் லோகேஷ் மீது தெரிவித்த புகார் உறுதி செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூலம் ராணுவ தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராணுவ வீரர் லோகேஷ் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து பவானி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராணுவ வீரர் லோகேஷை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். போக்சோவில் ராணுவ வீரர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.