கும்மிடிப்பூண்டியில் குடிசை வீடு தீப்பிடித்ததில் 80 வயது மூதாட்டி கருகி பலி
- குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது.
- உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி சுண்ணாம்புகுளம் அடுத்த நார்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது85). இவரது மனைவி ராஜம்மாள் (80). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கணவன்-மனைவி இருவரும் வீட்டில் தூங்கினர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென மின் கசிவால் குடிசை வீட்டில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பற்றி எரிந்தது.
இதில் சிக்கிய மூதாட்டி ராஜம்மாவால் வெளியே வர முடியவில்லை. அவர் தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். அவரது கணவர் கோவிந்தராஜ் லேசான காயங்களுடன் உயிர்தப்பி வெளியே வந்தார்.
மேலும் குடிசையில் பற்றிய தீ அருகில் இருந்த உமாபதி என்பவரது வீட் டுக்கும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி, மனைவி கற்பகம், அவர்களது 2 பெண் குழந்தைகள் ஆகியோர் அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதில் கோவிந்தராஜ், உமாபதி ஆகியோரின் வீடுகள் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் உமாபதி வீட்டில் இருந்த ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணம், 6 பவுன் நகை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. ஆரம்பாக்கம் போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தீ விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.