மணவாளக்குறிச்சி அருகே 7-ம் வகுப்பு மாணவி கடத்தல்: தொழிலாளி மீது வழக்கு
- சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
- போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.
குளச்சல்:
நெல்லை மாவட்டம் ராதாபும் பண்டாரக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுடலை.
இவரும், இவரது மனைவி முத்துபேச்சியும் கடந்த ஒரு வருடமாக குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பெரியவிளை கடற்கரை பகுதியில் கூடாரம் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களது 14 வயது சிறுமி ராதாபுரத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி விடுமுறையை முன்னிட்டு சிறுமி பெரியவிளை வந்து பெற்றோருடன் தங்கினாள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோருடன் படுத்து தூங்கிய சிறுமியை காணவில்லை.
சிறுமியை ஈத்தாமொழி அருகே சுண்டபற்றி விளையை சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழிலாளி செல்வகுமார் (35) என்பவர் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து தாயார் முத்துபேச்சி குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் செல்வகுமார் மீது கடத்தல் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.