கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை ரூ.50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டது.
- கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் அவரின் வாரிசுகள், உறவினர்கள் பங்கேற்றனர்.
சென்னை அரசினர் தோட்டத்தில் இன்றைய ஓமந்தூரார் வளாகத்தில் அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தை புதுப்பித்து, 'கலைவாணர் அரங்கம்' என அதற்கு பெயர் சூட்டியவர் கலைஞர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை ஜி.என்.செட்டி சாலை - திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.
அந்த இடத்தில் இருந்த கலைவாணரின் சிலையை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என அறிவித்தார். அதன்படி சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை புதுப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கலைவாணர் அரங்கில் புதுப்பிக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை திறப்பு விழாவில் அவரின் வாரிசுகள், உறவினர்கள் மற்றும் நடிகர் சங்கத்தினர் பங்கேற்றனர்.