உள்ளூர் செய்திகள்

மீஞ்சூர் அருகே மின்கம்பத்தில் மின்சாரம் கசிந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2023-07-12 06:34 GMT   |   Update On 2023-07-12 06:34 GMT
  • பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு.
  • பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பொன்னேரி:

மீஞ்சூர், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவரது மகன்கள் முகேஷ், ரூபேஷ் (வயது15). இவர்களில் ரூபேஷ் அதே பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை ரூபேஷ், வீட்டின் அருகே உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பம் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பாய்ந்து இருந்தது.

இதனை அறியாமல் ரூபேஷ் மின்கம்பத்தை தொட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் தூக்கி வீசப்பட்டார். சம்பவ இடத்திலேயே ரூபேஷ் இறந்து போனார்.

தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து பலியான ரூபேசின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி மாணவன் பலியானது பற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர்.

பழுதடைந்த உயர் கோபுர மின் விளக்கு கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி மீஞ்சூர் -திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி தாசில்தார் செல்வக்குமார், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். மின்கம்பம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News