அச்சரப்பாக்கத்தில் லாரி கவிழ்ந்ததில் 1 லட்சம் முட்டைகள் உடைந்து வீணானது
- விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது.
மதுராந்தகம்:
நாமக்கல்லில் இருந்து 1 லட்சம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னை நோக்கி இன்று அதிகாலை வந்து கொண்டு இருந்தது.
அச்சரப்பாக்கம் பஸ் நிலையம் எதிரே அதிகாலை வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் லாரியில் இருந்த 1 லட்சம் முட்டைகளும் உடைந்து நாசமானது. முட்டைகள் உடைந்து சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியது.
இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பி னார். சாலை நடுவே லாரி கவிழ்ந்ததால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சாலையில் சிதறிய முட்டைகளால் விபத்து ஏற்படாமல் தடுக்க அதனை முழுவதும் அகற்றினர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.