உள்ளூர் செய்திகள்

பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம்- சேலம் மாவட்ட கலெக்டர் தகவல்

Published On 2022-08-31 09:22 GMT   |   Update On 2022-08-31 09:22 GMT
  • பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்க்க மானியம் வழங்கப்படுகிறது என்று சேலம் மாவட்ட கலெக்டர் தகவல் வெளியிட்டுள்ளார்.
  • முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 250 முதல் 1000 சதுர.மீ அளவிலுள்ள பல்நோக்கு பண்ணைக் குட்டைகளில் மீன் வளர்ப்பினை மேற்கொள்ள ஏதுவாக மீன் குஞ்சு, மீன் தீவனம், உரங்கள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான உள்ளீட்டு பண்ணைப் பொருட்கள் மற்றும் பறவை தடுப்பு வசதிகள் ஆகிய மீன் வளர்ப்பிற்கான ஒரு அலகிற்கு ஆகும் செலவினம் ரூ.36 ஆயிரத்தில் 50 சதவீதம் மானியமாக ஒரு பண்ணைக் குட்டைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த மானியமானது பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். முதலில் வரும் விண்ணப்பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்பு நிலை அடிப்படையில் மானியம் பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எனவே, இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை 10-ந்தேதிக்குள் மேட்டூர் அணை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News