பாளை தனியார் பள்ளியில் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா மேற்பார்வையில் உடல் தகுதி தேர்வு நடந்தபோது எடுத்தபடம்.
ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஒருவருக்கு மார்பளவு பரிசோதனை செய்த காட்சி. அருகில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார்.
2-ம் நிலை ஆண், பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு -பாளையில் இன்று தொடங்கியது
- எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு இன்று தொடங்கியது.
- 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 345 பேர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை பிரிவில் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு உள்ள 3,552 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி வெளியிடப்பட்டது.
உடல் தகுதி தேர்வு
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 15-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27-ந் தேதி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கியது.
நெல்லை மாவட்டத்தில் ஆண்களுக்கான உடல் தகுதி தேர்வு இன்று பாளை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. தொடர்ந்து 11-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக 1159 பேருக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது.
இதில் முதல் முதல்நாளான இன்று 400 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்ட நிலையில் 345 பேர் கலந்து கொண்டனர்.
இதேபோல் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதற்காக 544 பேருக்கு அழைப்பானை அனுப்பப்பட்டது. இன்று 235 பேர் கலந்து கொண்டனர்.
டி.ஐ.ஜி, கமிஷனர்
ஆயுதப்படை மைதானத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் மேற்பார்வையிலும், பெண்களுக்கான தேர்வு மாநகர கமிஷனர் ராஜேந்திரன், தலைமையிடத்து துணை கமிஷனர் அனிதா ஆகியோர் மேற்பார்வையிலும் நடந்தது.