உள்ளூர் செய்திகள்

ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-08-05 15:12 IST   |   Update On 2023-08-05 15:12:00 IST
  • அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.
  • பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியில் மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடப்பது வழக்கம். அதன்படி, நேற்று மூன்றாம் ஆடி வெள்ளி என்பதால், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டது.

இதே போல், ராசுவீதி துளுக்காணி மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவில், பழையபேட்டை நேதாஜி சாலையில் உள்ள சமயபுரத்து மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.

மேலும், ஜக்கப்பன் நகரில் உள்ள ராஜகாளியம்மன் கோவில், அக்ரஹாரம் அம்பா பவானி கோவில் மற்றும் ராயக்கோட்டை மேம்பாலம் அருகில் உள்ள பெரியமாரியம்மன் கோவிலில், மேல்சோமார்பேட்டை ஸ்ரீயோகமாயா பிடாரி முண்டக கன்னி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வெள்ளியையொட்டி பக்தர்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றி வேண்டுதல் நிறைவேற்றினர். இதே போல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று காலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News