மகளிர் உரிமைத்திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் - கலெக்டர் கிராந்திகுமார் தகவல்
- முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.
- பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்ப விநியோகமானது 2 கட்டங்களாக நடத்திட தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக கடந்த 24-ந் தேதி முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாம்களில் விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்து வருகிறார்கள்.
சில குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் இன்னும் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக தெரிய வருகிறது. எனவே விண்ணப்பங்கள் பெற்று பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு முகாமானது ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள முகாமிலேயே வருகிற 3,4-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை 2 நாட்கள் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
விண்ணப்பம் இதுவரை பெறாதவர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நியாயவிலைக்கடையின் விற்பனையாளரிடம் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.