மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- சிவகங்கை அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அம்சம் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் அண்ணாமலை தலைமை தாங்கினார். திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் மீனாள் வெள்ளைச்சாமி, பிள்ளையார்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொண்டு நிறுவன கூட்டமைப்பு தலைமை அறிவுரையாளர் பெருமாள் கலந்து கொண்டார். பிள்ளையார்பட்டியில் கோடைகாலம் முழுவதும் செயல்படும் வகையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பிலான அரிசி, பலசரக்கு, காய்கறிகள், வேட்டி, சேலை வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான ஆட்டோ வழங்கப்பட்டது. மேலும் ஒருவருக்கு ரூ. 8 ஆயிரம் மதிப்பிலான 3 சக்கர வாகனமும், வறுமையில் உள்ள பெண்களுக்கு மகளிர் மேம்பாட்டு விழிப்புணர்ச்சி முகாம் அமைத்து அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்பட்டது. ஒரு மாணவிக்கு கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இதில் மீனாள் ஆதீனமிளகி, பால சரசுவதி முத்துகிருஷ்ணன், நிருபா அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.