மதுரை வீரன் கோவில் கிடா வெட்டு திருவிழா
- மதுரை வீரன் கோவில் கிடா வெட்டு திருவிழா நடந்தது.
- இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் கல்வெட்டு மேடு பகுதியில் நரிக்குறவர் காலனியில் உள்ள காளியம்மன், மீனாட்சி அம்மன், மதுரை வீரன் கோவிலில் கிடாய் வெட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா 5 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக கிடா வெட்டு திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்து கிடாய் வெட்டு திருவிழா நடைபெற்றது.இதில் நரிக்குறவர் சமுதாய மக்கள் திரளாக கலந்து கொண்டு கொண்டாடினர்.
முன்னதாக திருப்புத்தூர் அண்ணா சிலை விநாயகர் கோவிலில் இருந்து அழகு குத்தி, பால்குடம், கரகம், பறவை காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடி எடுத்து ஊர்வலமாக சிவகங்கை ரோடு, கல்வெட்டு மேடு, இந்திராநகர் வழியாக நரிக்குறவர் காலனிக்கு வந்தனர்.
அங்கு அமைத்துள்ள அவர்களது குலதெய்வ கோவில் மற்றும் வீடுகளில் அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தி தெய்வங்களை வணங்கினர்.
அதனைத் தொடர்ந்து காளியம்மனுக்கு 7 எருமை மாடுகளும், மீனாட்சி- முனீஸ்வரன் கோவிலுக்கு ஆட்டுகிடாய்களும் பலியி ட்டு வழிபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.