உள்ளூர் செய்திகள்

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்வு

Published On 2023-07-24 09:18 GMT   |   Update On 2023-07-24 09:18 GMT
  • அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.
  • ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது

கோவை,

சிறுவாணி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் 26 வார்டுகள், 20-க்கும் மேற்பட்ட நகரையொட்டிய கிராமங்களுக்கு நீராதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. 49.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் இருந்து, தினமும் குடிநீருக்காக 10 கோடி லிட்டர் (100 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வந்தது.

பிப்ரவரி மாதத்தின் இறுதியில் இருந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால், அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன்படி, மார்ச் மாதத்தில் அணையின் நீர்மட்டம் 6 அடியாக சரிந்தது.

அதைத்தொடர்ந்து ஏப்ரல்,மே மாதங்களில் அணையின் நீர்மட்டம் 5 அடிக்கும் கீழ் வந்தது.

ஜூன் மாதத்தில் ஒரு அடிக்கும் குறைவாக சரிந்தது. இதனால், சிறுவாணி குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் லாரிகள் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்பட்டன.

இந்நிலையில், ஜூன் மாத இறுதியில் இருந்து சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இடைவெளி விட்டு கனமழை பெய்து வருவதால், சிறுவாணி அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்தது.

இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி கூறுகையில், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 7 கோடி லிட்டரில் இருந்து 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்ப ட்டுள்ளது.

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஆகஸ்ட் மாதத்தில் அணையின் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்ட வாய்ப்புள்ளது என்றார்.

Tags:    

Similar News