உள்ளூர் செய்திகள்

சாம்பவர்வடகரை அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்- கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை

Published On 2022-09-20 06:42 GMT   |   Update On 2022-09-20 06:42 GMT
  • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
  • சாம்பவர் வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது.

சாம்பவர் வடகரை:

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

சாம்பவர்வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது. மேற்கூரை மழை நீரால் ஒழுகி வகுப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தரம் அற்ற பள்ளிகளை இடிக்க உத்தரவிட்டிருந்தனர். இப்பள்ளியில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதுவும் இதுவரை கட்டித் தரப்படவில்லை.

தற்போது உள்ள பள்ளியும் மழையால் நனைந்து மாணவர்களின் படிப்பு தடைப்படுகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் இடநெருக்கத்தாலும் அவதிப்படுகின்றனர். அதிக இட வசதியும் இல்லை.

எனவே இப்பகுதி பள்ளி குழந்தைகளில் உயிர் சேதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி கீழூரில், வடக்கே எம்.ஜி.ஆர். காலனியில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்காலணியில் வீட்டு கழிவுநீர் சாக்கடை செல்ல வாறுகால் வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அதனை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News