சேலம் ரெயில் நிலையத்தில் இறங்கியவடமாநில வாலிபர் திடீர் மாயம்
சேலம்:
அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டம், போகா அருகே நகோபரா கிராமத்தை சேர்ந்த ராஜாக் ரப்பா என்பவர் மகன் ப்ரோஹலாத் ரப்பா (வயது 35). இவர் கடந்த மே மாதம் 25-ந் தேதி, தனது உறவினரான அக்ஷய் ரப்பா என்பவருடன், குவாத்தி ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் கொல்லம் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார்.
இந்த ரெயில் கடந்த மே மாதம் 30-ந் தேதி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தபோது, தண்ணீர் குடிப்பதற்காக 4-ம் எண் நடைமேடையில் இறங்கினார். அவர் திரும்பி வருவதற்குள் ரெயில் புறப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் ப்ரோஹலாத் ரப்பாவை காணவில்லை. அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ப்ரோஹலாத் ரப்பாவின் அக்கா வினிதா ரப்பா (37), சேலம் ரெயில்வே போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.