ஆட்டோ டிரைவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த வாலிபர் கைது
- சதீஷ் (23). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மெய்யனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்.
சேலம்:
சேலம் மெய்யனூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதீஷ் (23). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று மெய்யனூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். சதீஷ் பணம் தர மறுக்கவே திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்த அந்த வாலிபர் சதீசை கத்தி முனையில் மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சதீஷ் கூச்சல் போடவே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த வாலிபரை பிடித்து பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிடிபட்ட வாலிபர் திருச்சி ஸ்ரீரங்கம் அருகே மலைப்பட்டி ராம்கி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முரளி(34) என்பது தெரியவந்தது. போலீசார் முரளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.