பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.6 ஆயிரம் லஞ்சம்- கிராம நிர்வாக அலுவலர் கைது
- தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் கொடுத்தார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மகாதேவிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் (வயது 24). இவர் தனது தாத்தா பெயரில் உள்ள வீட்டு மனை மற்றும் காலி மனை உள்ளிட்டவற்றை தனது பெயரில் பத்திர பதிவு செய்தார். மகாதேவி மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் விடுப்பில் இருந்ததால் குணகரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமார் கூடுதல் பொறுப்பாக மகாதேவி மங்கலம் கிராமத்தில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் தினேஷ் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த உதயகுமாரிடம் மனு கொடுத்தார்.
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.8 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். பின்னர் ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தினேஷ் குமார் காஞ்சிபுரம் லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் அளித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையுடன் ரசாயனம் தடவிய ரூ.6 ஆயிரத்தை தினேஷ் கிராம நிர்வாக அலுவலர் உதயகுமாரிடம் வழங்கியபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக அவரை கைது செய்தனர்.