உள்ளூர் செய்திகள்

கோவையில் நிலம் வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.50 லட்சம் மோசடி

Published On 2023-10-13 14:41 IST   |   Update On 2023-10-13 14:41:00 IST
  • போலீசார் 2 ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
  • பாரதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.

கோவை.

கோவை தண்ணீர் பந்தல் ரோட்டை சேர்ந்தவர் சிவகுமார் (49). இவர் கோவை குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது நண்பர் ஒருவர் மூலமாக ரியல் எஸ்டேட் புரோக்கர்களான பழனி வேல், பாரதி ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் என்னை போனில் தொடர்பு கொண்டனர்.

அப்போது, அவர்கள் ரேஸ் கோர்ஸ் பகுதியில் 3.04 ஏக்கர் நிலம் விற்பனைக்கு உள்ளது. அந்த இடத்தின் விலை ரூ.40 கோடி என தெரிவித்தனர். அதனை நீங்கள் வாங்கி கொள்கிறீர்களா? என கேட்டனர்.

நானும் சம்மதம் தெரி வித்து, இடத்தை பார்க்க வேண்டும் என கூறினேன். இதையடுத்து 2 பேரும் என்னை, இடத்தை பார்க்க அழைத்து சென்றனர்.

இடத்தை பார்த்ததும் எனக்கு பிடித்து போகவே முன்பணமாக ரூ.50 லட்சம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து நான் கிரையம் செய்வதற்காக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றேன்.

அப்போது நான் வாங்கிய நிலம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

இதையடுத்து நான் பழனிவேல், பாரதியிடம் எனது பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை இதுவரை திருப்பி வரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் போலீசார் பழனிவேல், பாரதி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் கோவையில் இருந்த பாரதியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான பழனிவேலை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News