உள்ளூர் செய்திகள்

கோவையில் தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.5 லட்சம் மோசடி

Published On 2022-08-12 15:28 IST   |   Update On 2022-08-12 15:28:00 IST
  • கோவையில் அழகிய வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் கொடுக்க மறுத்து விட்டனர்.

கோவை:

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் நரசிம்மன்(வயது30), தனியார் நிறுவன ஊழியர். ரேஸ்கோர்சில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

நான் கடந்த ஆண்டு பேஸ்புக்கில் விளம்பரம் ஒன்றை பார்த்தேன். அதில், கோவையில் அழகிய வீடு விற்பனைக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தில் உள்ள செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது கோவை அவிநாசி ரோட்டில் லட்சுமி மில் சிக்னலில் உள்ள தங்களது கட்டுமான நிறுவன அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தனர்.

இதனையடுத்து நான் அங்கு சென்றேன். அப்போது அவர்கள் ஒரு வீட்டை காட்டினர். அதனை வாங்க விருப்பம் தெரிவித்து முன்பணமாக கடந்த மார்ச் மாதம் ரூ.5 லட்சம் பணத்தை கொடுத்தேன். அப்போது நிறுவனத்தினர் 3 மாதங்களில் பத்திரப்பதிவு செய்து வீட்டை விற்பதாக ஒப்பந்தம் போட்டு கொடுத்தனர்.

ஆனால், அவர்கள் சொன்னபடி வீட்டை கொடுக்க வில்லை. இது குறித்து மீண்டும் தொடர்பு கொண்டு கேட்ட போது, மழுப்பலாக பதில்அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த நான் விசாரித்த போது, வேறொருவர் பெயரில் உள்ள வீட்டை காட்டி விற்பதாக ஏமாற்றியது தெரியவந்தது.

நிறுவனத்துக்கு சென்று கேட்டபோது, அவர்கள் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை கொடுத்தனர். அதனை வங்கியில் செலுத்திய போது கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது.

மீண்டும் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, பணம் கொடுக்க மறுத்து விட்டனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

நரசிம்மன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்து வெரைட்டிஹால் ரோட்டை சேர்ந்த நாகேந்திரன்(49), காந்திபுரம் 3 வது வீதியை சேர்ந்த தர்மேந்திரகுமார்(48) ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். மேலும் நிறுவனத்தின் மேலாளர், அன்பு சந்திரன், மற்ற பங்குதாரர்கள் சரவணகுமார், பிரேம நந்தினி, சைனி தாமஸ் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News