உள்ளூர் செய்திகள்

சாலை விரிவாக்கப் பணிக்காக கடலூர் ஆல்பேட்டையில் இருந்த பயணியர் நிழற்குடை நேற்று நள்ளிரவில் இடிக்கப்படும் காட்சி.

சாலை விரிவாக்க பணி கடலூர் ஆல்பேட்டையில் பயணியர் நிழற்குடை இடித்து தரைமட்டம்: நள்ளிரவில் நெடுஞ்சாலைத் துறையினர் அதிரடி

Published On 2023-04-07 07:51 GMT   |   Update On 2023-04-07 07:51 GMT
  • இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைக்கின்றன.
  • பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது.

கடலூர்:

கடலூர் பெரிய கங்கணாங்குப்பத்திலிருந்து மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு வரை தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதன் தொடர்ச்சியாக தற்போது சாலையின் இரு புறமும் வடிகால் வாய்க்கால் அமைத்தும், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றியும் அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடலூர் மஞ்சகுப்பம் ஆல்பேட்டை பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக 43 வீடுகள் இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பல ஆண்டுகளாக வசித்து வந்த வீடுகளை இடிப்பதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மாற்று இடம் வழங்கினால் நாங்கள் உடனடியாக இடத்தை காலி செய்வதாக தெரிவித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம் 43 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பல ஆண்டுகளாக சாலை ஓரத்தில் இருந்து வந்த பயணிகள் நிழற்குடை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் முழுவதுமாக இடிக்கப்பட்டது. அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து விடிய விடிய காத்திருந்தனர். மேலும் ஏதேனும் வீடுகள் இடிக்கப்பட உள்ளதா? என பொதுமக்கள் பார்வையிட்டனர்.

தற்போது முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் பயணிகள் நிழற்குடை இடிக்கப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

மேலும் 43 வீடுகளை சேர்ந்த பொதுமக்கள், எங்கள் வீடுகளை இடிக்க வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்தது போல் எங்களுக்கு மாற்று இடம் வழங்கிய பிறகு எங்கள் வீடுகளை இடிப்பதற்கு அனுமதிப்போம். இதற்கான நடவடிக்கை காலதாமதம் ஆனால் தமிழ்நாடு முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஆகையால் மாவட்ட நிர்வாகம் எங்களது அடிப்படை கோரிக்கையான மாற்று குடியிருப்பை உடனடியாக அதற்கான சான்று வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதன் காரணமாக அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News