ெரயில் நிலையத்தில் பயணி மீது சரமாரி தாக்குதல்
- அடி வாங்கியவர் காப்பாற்ற கோரி கதறல்
- நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
அரக்கோணம்:
அரக்கோணம் ரெயில் நிலையம் 6-வது நடை மேடையில் மின்சார ரெயில் வந்து நின்றது. பயணிகள் பரபரப்பாக இறங்கி சென்றனர்.
அப்போது நடைமடை அருகே பயணி ஒருவர், மற்றொரு பயணியை சரமாரியாக தாக்கினார்.
அடி வாங்கிய நபர் என்னை விட்டு விடு என அடித்தவர் காலில் விழுந்துள்ளார்.
இருப்பினும் அவர் தொடர்ந்து அடித்ததால், அடி வாங்கியவர் என்னை காப்பாற்றுங்கள் என சக பயணிகளிடம் கதறி அழுதார். ஒரு கட்டத்தில் பயணிகள் ஒன்று கூடி அடி வாங்கியவரை மீட்டனர்.
பயணிகள் போட்ட சத்தத்தில் அடித்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
அனைத்து ரெயில் நிலையங்களிலும் ரெயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
ரெயில் பெட்டிகளை சோதனை செய்வதோடு, பயணிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவே ரெயில்வே போலீஸ் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
பொதுவாக ரெயில் நிலையங்களில் அடிதடி போன்ற குற்ற செயல்கள் நடைபெறுவது குறைவு.
ஆனால் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இது போன்ற குற்றச் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது.
ரெயில்வே போலீசார் சரிவர ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை. அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே, இதுபோன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணம். இதனை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் மவுனம் சாதிக்கின்றனர்.
ரெயில் நிலையங்களில் இது போன்ற குற்றசம்பவ தடுக்க ரெயில்வே நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.