உள்ளூர் செய்திகள்

வியாபாரிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

வாரச்சந்தை வியாபாரிகள் 'திடீர்' சாலை மறியல் போராட்டம்

Published On 2023-07-05 12:54 IST   |   Update On 2023-07-05 12:54:00 IST
  • ராமநாதபுரத்தில் வாரச்சந்தை வியாபாரிகள் ‘திடீர்’ சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெறும். ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள், மளிகை பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறார்கள். இதன் காரணமாக வாரச்சந்தைக்கு ராமநாதபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொது மக்கள் வந்து செல்வார்கள்.

இந்த நிலையில் ராமநாத புரம் புதிய பஸ்நிலையத்தை ரூ.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் வாரச்சந்தை அமைக்க நகராட்சி நிர்வா கம் தடை விதித்திருந்தது. இதனால் வியாபரிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

இன்று புதன்கிழமை என்பதால் அதிகாலையி லேயே வழக்கமான வாரச் சந்தை நடக்கும் பகுதிக்கு வந்த வியாபாரிகள் அங்கு கடை வைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து புதிய பஸ் நிலைய சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வாரச்சந்தை அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கடை அமைக்க வேண்டாம் என கூறினர். இதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி அதிகாரிகளுக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நகராட்சி நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து வாரச்சந்தை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென ராமநாதபுரம் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ்பாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்று மட்டும் வாரச்சந்தை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த வாரம் முதல் வாரச்சந்தை வேறு ஒரு இடத்தில் அமைக்க மாற்று இடம் தரப்படும் என அதிகாரிகள் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட வாரச்சந்தை வியாபாரிகள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News