உள்ளூர் செய்திகள்

வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும்- தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை

Published On 2022-12-30 09:24 GMT   |   Update On 2022-12-30 09:24 GMT
  • வருமான வரி விகிதாசாரத்தை மாற்ற வேண்டும் என தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தலைவர் அஸ்மாபாக் அன்வர்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல் படுத்தப்பட்டது முதல் அநேகமாக எல்லாவித பொருட்கள் மீதும் அதிகபட்ச விகிதாசாரத்தில் வரி விதிக்கப்பட்டு பணக்காரர்கள் முதல் பாமரர்கள் வரை சுமை ஆகிவிட்டது. சின்னஞ்சிறு சேவைகளுக்கு கூட விலக்கு அளிக்கப்படவில்லை.

செலவினங்கள் மீது விதிக்கப்படும் வரியே சேவை வரி என்ற பெயரில் வசூலிக்கப்படுகிறது. வருமான வரி, வருமானம் அதிகமுடையோர்க்கு மட்டுமே விதிக்கப்படும் நிலையில் சேவை வரி என்ற செலவின வரி அனைத்து தரப்பினரிடமும் பாகுபாடின்றி வசூலிக்கப்படுகிறது.

வருமானத்துக்கும் வரி, அதேநேரம் செலவினத்துக்கும் வரி என்ற கொள்கை நியாயமற்றது. எனவே, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இதனை கவனத்தில் கொண்டு வருகிற மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதங்களை மாற்றியமைக்க முன்வர வேண்டும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் வரிச்சுமையில் இருந்து விடுபட வேண்டும். வருமான வரி வரம்பை ரூ.5 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். 80 ஆண்டு நிறைவடைந்த மிக மூத்த குடிமக்களுக்கு முற்றிலும் வரி விலக்கு அளிக்க வேண்டும். வரிகள் சுமையானது என்ற மக்களின் எண்ணத்தை போக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News