உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி கோப்பைக்கான வினாடி-வினா போட்டி

Published On 2022-11-17 09:32 GMT   |   Update On 2022-11-17 09:32 GMT
  • சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
  • தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம் என கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி பேசினார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில், பயின்றோர் கழகம் சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிவந்தி கோப்பைக்கான மாநில அளவிலான 19-வது ஆண்டு வினாடி-வினா போட்டி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமை தாங்கினார். கணினித்துறை பேராசிரியர் ஜென்ஸி வரவேற்று பேசினார். பயின்றோர் கழக செயலாளர் ஜோஸ்வா பாபு, சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். கியூமத் ஆசிரியர் சுகன்யா பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் கூறுகையில் 'தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற நேர்மறையான எண்ணம் மற்றும் சீரான முயற்சியே வெற்றியின் தாரகமந்திரம்' என்றார்.

தொடர்ந்து நடந்த வினாடி-வினா போட்டியில் 15 பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றில் 6 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இறுதிச்சுற்று வினாடி-வினா போட்டியை கணினித்துறை பேராசிரியர் கேசவராஜா நடத்தினார். இதில் நெல்லை சங்கர்நகர் ஸ்ரீஜெயேந்திரா சரஸ்வதி சுவாமிகள் கோல்டன் ஜூப்ளி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பிடித்து, சிவந்தி கோப்பையை வென்றது. தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தது.

பின்னர் பரிசளிப்பு விழா நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. முதலிடம் பெற்ற அணிக்கு சிவந்தி சுழற்கோப்பையும், ரொக்கப்பரிசும் கல்லூரி நாள் விழாவில் வழங்கப்படுகிறது. முடிவில், தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் சித்ரா தேவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News