சோழீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
- சோழீஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது
- பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்
புதுக்கோட்டை:
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கி ழமையையொட்டி 63ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளி நாளில் திருவிளக்கு பூஜை நடைபெறும். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக திருவிளக்கு பூஜை நடைபெறாத நிலையில் நடப்பாண்டுக்கான திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.
சிவாச்சாரியார் வைரவன், கணேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிளக்கு மந்திரம் ஒதி பூஜையை வழிநடத்தினர். பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த 1001 பெண்கள் பங்கேற்று விளக்கேற்றி வழிபட்டனர். பூஜையையொட்டி சோழீஸ்வரர் மற்றும் ஆவுடையநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. பூஜைக்கான ஏற்பாடுகளை சோழீஸ்வரர் கோயில் திருவிளக்கு பூஜை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
அதுபோல கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில், பரியாமருதுபட்டி பரியாமருந்தீஸ்வரர் கோயில், பொன்னமராவதி அழகியநாச்சியம்மன் கோயில், பாலமுருகன் கோயில், புதுப்பட்டி புவனேஸ்வரி உடனாய பூலோகநாதர் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்களில் நடைபெற்ற ஆடிவெள்ளி சிறப்புவழிபாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர்.