கொத்தமங்கலத்தில் மத்திய அரசு முத்திரையுடன் கடிதம் அனுப்பி மோசடி முயற்சி-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
- மோசடி முயற்சியில் ஈடுபட்டவர்களிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்
- இதனால் மளிகை கடைக்காரரின் ரூ.6 ஆயிரத்து 300 தப்பியது
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் மேற்கு பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் ஒருவருக்கு, இந்தியா கம்யூனிகேசன் ஆன்லைன் மார்க்கெட்டிங் டெல்லி என்ற பெயரில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை வாங்கி பிரித்து பார்த்த போது அதில் மத்திய அரசின் முத்திரை (எம்பளம்) பதிக்கப்பட்ட கடிதம் இருந்துள்ளது. அந்த கடிதத்துடன்இணை க்கப்பட்ட கூப்பனை சுரண்டினால் பரிசு உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. கூப்பனை சுரண்டி பார்த்த போது அதில் ரூ.2 லட்சத்து 75 ஆ யிரம் பரிசு கிடைத்திருப்பதாக காட்டியுள்ளது.
ஆனால் இந்த தொகையை பெற மத்திய-மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.6 ஆயிரத்து 300-ஐ செலுத்தினால் உடன் பரிசு தொகை அனுப்பி வைக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கஸ்டமர் கேர் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டாலும் உடனே வரி பணத்தை கட்டினால் பரிசு தொகை கிடைக்கும். தாமதம் செய்தால் பரிசு கிடைக்காமல் போகும் என்றும் கூறியுள்ளனர். இதனால் கடைக்காரர் பணத்தை அனுப்ப தயாரானார். இதனை கேள்வியுற்று அவரிடம் வந்த சிலர், இது ஒரு வகையான மோசடி ஏமாற வேண்டாம் என்று எச்சரித்துள்ளனர்.
அதன் பின்னர் கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்ட மளிகை கடைக்காரர் பணத்தை பெற்றுக்கொண்ட உடன் வரியை செலுத்துவதாக தெரிவித்துள்ளார். இதை கேட்ட உடன் தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் தொடர்பு கொள்ள இயலவில்லை. அப்போது தான் இது மோசடி வேலை என்று கடைக்காரர் உறுதியாக தெரிந்து கொண்டார். இதனால் மளிகை கடைக்காரரின் ரூ.6 ஆயிரத்து 300 தப்பியது.
நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகை யில், தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்கும் போது அதனை பயன் படுத்தி மோசடிகளும் அதிகரித்துள்ளது.தற்போது மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தையும் மத்திய அரசு முத்திரையை மோசடிக்காக பயன்படுத்தி மக்களை நம்ப வைத்து பணம் மோசடி செய்து வருகின்றனர். இது போன்ற மோசடி கும்பலை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.