உள்ளூர் செய்திகள்

ஆலங்குடி வார சந்தையில் துர்நாற்றம் வீசும் மீன் கழிவுகளை அகற்ற கோரிக்கை

Published On 2023-05-12 11:46 IST   |   Update On 2023-05-12 11:46:00 IST
  • ஆலங்குடி வார சந்தையில் துர்நாற்றம் வீசும் மீன் கழிவுகளை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்
  • ஆலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் வாரந்தோறும் வியாழக்கிமை அன்று வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. ஆலங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களில் இருந்து இந்த சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க வந்து செல்கின்றனர்.பொதுமக்கள் அதிகமாக வருவதால், வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் சந்தை பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும் ஆக்கிரமித்து வியாபாரிகள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்தின் எதிரே மீன்கடை மற்றும் மீன்களை சுத்தம் செய்யும் கடைகளும் வார சந்தையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வார சந்தையின் போது அங்கு சேரும் மீன் கழிவுகளின் துர்நாற்றம் அப்பகுதியில் வாரம் முழுவதும் வீசி வருகிறது.இதனால் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அங்கு வரும் பொது மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பேரூராட்சி நிர்வாகம் மீன் வெட்டும் கடைகளை இடம் மாற்றியோ அல்லது துர்நாற்றம் வீசாமல் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News