குடியரசு தின விழா அன்று கல்லாலங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு-அடிப்படை வசதிகள் செய்து தராததால் நடவடிக்கை
- குடியரசு தின விழா அன்று கல்லாலங்குடி ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்யபட்டுள்ளது
- சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஆலங்குடி:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் உண்ணவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சியில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சிக்குட்பட்ட 7 குக்கிராமங்களில் உள்ள சாலைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கல்லாலங்குடியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி வணிகர்களும் கடைகளை அடைத்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதனை அறிந்து விரைந்துவந்த ஆலங்குடி காவல்துணை கண்காணிப்பாளர் தீபக்ரஜினி, காவல் ஆய்வாளர் அழகம்மை, திருவரங்குளம் ஒன்றிய ஆணையர்கள் ஆயிஷா, ராணி கோகுலாகிருஷ்ணன், துணை வட்டாட்சியர் பழனியப்பன், வருவாய்த்துறை அதிகாரி துரைக்கண்ணு, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படாததால், ஊராட்சியில் நடைபெற உள்ள குடியரசு தின கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.