உள்ளூர் செய்திகள்

10 ரவுடிகள் அதிரடி கைது

Published On 2022-08-18 08:41 GMT   |   Update On 2022-08-18 08:41 GMT
  • 10 ரவுடிகள் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
  • தனிப்படை போலீசாருக்கு பாராட்டு

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் குற்றத்தில் ஈடுபடுவோர்களை கைது செய்யவும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில், குற்றப்பின்னணி கொண்டோரை கண்காணிக்க தனிப்படை அமைத்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டிருந்தார். இந்த தனிப்படையினர் அந்தந்த பகுதி போலீசாருடன் இணைந்து குற்றவாளிகளை கண்காணிக்கும் பணியை தொடங்கினர்.

இதில் புதுக்கோட்டை நகரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ரவுடிகளான திருவப்பூர் கீழத்தெருவை சேர்ந்த பொன்னுசாமி மகன் யோகேஸ்வரன் (24), மாயாண்டிசாமி நகர் செல்லத்துரை மகன் சந்தோஷ்குமார் (28), கீரமங்கலம் அண்ணாதுரை மகன் சுரேஷ்குமார் (23), புதுக்கோட்டை சார்லஸ் நகர் பாபு மகன் ஜெயராமன் (20), வடக்கு 4-ம் வீதியை சேர்ந்த குமார் மகன் விஜய் (20), மச்சுவாடி சுப்பிரமணி மகன் அஜி (20) ஆகிய 6 பேரை கைது செய்தார். இவர்களிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல் திருக்கோகர்ணம் பகுதியில் திருக்கோகர்ணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஆயுதங்களைடன் சுற்றித்திரிந்த ரவுடிகளான புதுக்கோட்டை காமராஜபுரம் அய்யப்பன் மகன் பூபதி (27), அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்த நாகராஜ் மகன் நெருப்பு தினேஷ் (22), சுப்பையா மகன் கொள்ளு சக்தி (24) ஆகிய 3 பேரை கைது செய்தார். இதேபோல, இலுப்பூர் பிரான்சிஸ் பிருதிவிராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, தனிப்படை போலீசாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

Tags:    

Similar News