கோத்தகிரி சக்திமலை கோவிலில் பிரதோஷ பூஜை
- சக்திமலை முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது.
- சோம வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.
அரவேணு,
கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் சிறப்பு பிரதோஷ பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
இதில் சிவ பெருமானுக்குரிய முக்கியமான எட்டு விதமான அஷ்ட விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது பிரதோஷ விரதமாகும். சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம், சோமவார பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் உயர்வான பலனை தரும்.
இதையொட்டி சக்திமலை முருகன் கோவிலில் உள்ள சிவன் சன்னதியில் காலை10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த சோம வார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டு லிங்கேஸ்வரரைத் தரிசனம் செய்தனர்.