முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
- அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரியில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மேல்நிலை விடைத்தாள் மதிப்பீட்டு மைய முகாமில், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை வாயிற்கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் சிவா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஈஸ்வரி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், தலைமையிட செயலாளர் திம்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்புச் செயலாளர் நாராயணன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
இதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2009 ஜூன் 1-ந் தேதி முதல் பணியில் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பினை சரி செய்திட உரிய ஆணை வழங்கிட வேண்டும். 2004 முதல் 2006 வரை தொகுப்பூதிய காலத்தை பணி வரன்முறை படுத்தி சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும்.
எதிர்கால சமுதாயத்தை வடிவமைக்கும் ஆசிரியர்களின் பணிப் பாதுப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதுபோல் அனைத்து நலத்திட்டங்களும், சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கிட வேண்டும்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லுாரியில் 2.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஆசிரியர் மாணவர் நலன் கருதி கற்பித்தல் கற்றல் பணியை மட்டுமே ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும்.
மத்திய அரசு வழங்கியதுபோல் அகவிலைப்படியை உடனடியாக வழங்கிட வேண்டும். 2019 முதல் நிறுத்த வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்கிட வேண்டும். நீட் மற்றும் சியூடிஇ தேர்வை உடனடியாக ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.