உள்ளூர் செய்திகள்

பெருங்குடி-துரைப்பாக்கம் 7 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடக்கும் சாலை- வாகனங்கள் ஏற்படுத்தும் புழுதி படலம்

Published On 2023-07-18 05:42 GMT   |   Update On 2023-07-18 05:42 GMT
  • தினமும் 100 முதல் 120 கழிவு நீர் லாரிகள் இந்த வழியாக செல்கிறது.
  • இந்த பகுதிக்கு வருவதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

சென்னை:

பெருங்குடியையும் துரைப்பாக்கத்தையும் இணைக்கும் இணைப்பு சாலை ஒரு கிலோ மீட்டர் தூரம் உடையது. ஆனால் இந்த சாலையில் பயணிப்பது அவ்வளவு எளிதானதல்ல.

மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். தினமும் 100 முதல் 120 கழிவு நீர் லாரிகள் இந்த வழியாக செல்கிறது. சில நேரங்களில் ரோட்டின் இரு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக செப்பனிடப்படாததால் இந்த சாலை குண்டும், குழியுமாக புழுதி பாதையாக மாறி உள்ளது. லாரிகள் செல்லும் போது வெளிவரும் புழுதி படலம் அந்த வழியாக செல்லும் பொது மக்களை பயமுறுத்துகிறது. இந்த புழுதிக்கு பயந்தே ஓ.எம்.ஆர். சாலைக்கு செல்பவர்கள் இந்த பாதை வழியாக செல்வதையே தவிர்த்துவிட்டார்கள்.

இந்த பகுதிக்கு வருவதற்கு வாடகை கார் மற்றும் ஆட்டோக்களில் ரூ.50 முதல் ரூ.100 வரை அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள்.

இந்த பகுதியில் வசிக்கும் குழந்தைகள், தூசியின் காரணமாக இருமல், சளிகளால் அவதிப்படுகிறார்கள். கார்களில் இந்த சாலை வழியாக செல்பவர்கள் கார் பழுது பார்க்க 6 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.25 ஆயிரம் வரை செலவழிப்பதாக ஆதங்கப்படுகிறார்கள்.

லாரி உரிமையாளர்கள் கூறும்போது, சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பங்கு லாரிகளை பழுதுபார்க்கவே செலவழிந்து விடுவதாக கூறினார்கள்.

அடுத்த மாதம் (ஆகஸ்டு) 2-வது வாரத்தில் ரூ.10.5 கோடி செலவில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறினார்கள்.

Tags:    

Similar News