உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்லூரி அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2023-01-22 12:26 IST   |   Update On 2023-01-22 12:26:00 IST
  • மருத்துவ கல்லூரி அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  • மணிகண்டன், வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்று கோழிப்பண்ணை வைத்து வியாபாரம் செய்துள்ளார்.
பெரம்பலூர்:


வியாபாரத்தில் நஷ்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழ உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 36). இவர், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நந்தினி(26) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன், வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்று கோழிப்பண்ணை வைத்து வியாபாரம் செய்துள்ளார்.

ஆனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒருவரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மது குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டில் உள்ள தனது கோழிப்பண்ணைக்கு சென்ற மணிகண்டன், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தொங்கினார்.

இதை அறிந்த உறவினர்கள் அங்கு சென்று மணிகண்டனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மணிகண்டனின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


Tags:    

Similar News